முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 117
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 117
நின்றான் சுதாஸ். அவளும் இவளைநிமிர்ந்து பார்த்தாள். ஆனால் ஒளியிழந்திருந்த அவளுடைய கண்கள் உணர்த்தும் சக்தியற்றிருந்தன. இதையறிந்த அவன்,
“அம்மா! இதோ உன்னுடைய சுதாஸ் வந்திருக்கிறேன்.”
அப்பொழுதும் நம்பிக்கை அடையாத அந்தத் தாய் தன் இருப்பிடத்திலிருந்து அசையாமலேயே,
“உண்மையிலே நீ என் மகன் சுதாஸாயிருந்தால் ஏன் தூரத்திலே விலகி நிற்கிறாய்? என்னுடைய கழுத்தை ஏன் தழுவிக் கொள்ளவில்லை?
என்னுடைய மடியிலே ஏன் படுத்துக் கொள்ளவில்லை?”
சுதாஸ் தன் தாயின் மடி மீது தலை வைத்து வணங்கினான். தன்னுடைய கரங்களால் அவனது தலையைத் தடவிய தாய் என்றும்போல் காற்றிலே மறைந்துவிடும் கனவு உருவமல்ல; உண்மையில் தன் மகனே என்று உணர்ந்தாள். அவனுடைய முகத்திலும், கன்னங்களிலும், நெற்றியிலும், தலை உச்சியிலும் மாறி மாறி முத்தமிட்டுத் தன் கண்ணீரால் அவனை நனைத்தாள். கண்ணீர் தடைபடாததைக் கண்ட மகன் “அம்மா! நான்தான் உன்னிடம் வந்து விட்டேன், இன்னும் ஏன் அழுகிறாய்?” என்றான்.
“இன்று ஒரு நாளைக்கு மாத்திரம் என் கண்ணின் மணியே! இப்பொழுதைக்கு மட்டும். இதுதான் என் கடைசிக் கண்ணீர்.”
அந்தப் புரத்திலிருந்து தகவல் தெரிந்து கொண்ட அரசன் திவோதாஸ், ஓடோடியும் வந்து தன் மகனைத் தழுவி ஆனந்தக் கண்ணீரால் அவனை நனைத்து விட்டான்.
நாட்கள் மாதங்களாய், மாதங்கள் வருடமாய் எப்படியோ இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. சுதாஸ் தாய் தந்தையருக்கு முன்னே, தான் சந்தோஷமாக இருப்பதாகவே காட்டிக் கொள்ள முயற்சித்து வந்தான். ஆனால் தனிமையாயிருக்கும் போது அவனுடைய காதுகளிலே அந்த நெஞ்சைப் பிளக்கும் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. “உனக்காக நான் மத்ராபுரியிலே வழி பார்த்துக் காத்துக் கொண்டே இருப்பேன்.” என்று அந்த அழகிய சிவந்த உதடுகள் சொல்வது, கண்ணீர் அவன் கண்களை மறைக்கும் வரை
காட்சியளித்துக் கொண்டே இருந்தது. மறக்க முடியாத இரண்டு அன்புள்ளங்களின் இடையில் அகப்பட்டுக் கொண்டிருந்தான் சுதாஸ். ஒன்று அபாலாவின் களங்கமற்ற காதல். மற்றொன்று கிழத்தாயின் எல்லையற்ற வாஞ்சை. வேறு பற்றுக் கோலில்லாத தாயின் இதயத்தைத் தவிக்க விட்டுச் செல்வது கேவலமான சுய நலம், நீசத்தனம் என்று அவன் கருதினான். ஆகையால் தாயார் உயிரோடு இருக்கும் வரை பாஞ்சாலத்தை விட்டுச் செல்வதில்லையென்று முடிவு செய்தான். ஆனால் ஒரு அரச குமாரனுக்குரிய சுகபோக வாழ்க்கை, ஆடம்பரங்களை ஏற்றுக் கொள்வது தன் சக்திக்கு அப்பாற்பட்ட காரியம் என்று அவனுக்குத் தோன்றிற்று. அவன் தந்தையிடம் எப்பொழுதும் அதிக மரியாதை காட்டி வந்தான். அவருடைய உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கும் அவன் என்றும் தயங்கியதில்லை.
ஒரு நாள் கிழவன் திவோதாஸ் தன் மகனை அழைத்து “குழந்தாய்!
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 115 | 116 | 117 | 118 | 119 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுதாஸ், அவன், என்று, கொண்டே, கண்ணீர், தாய், ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்

