பாடல் 950 - பேருர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்த தானன தத்த தானன தானா தானா தானா தானா ...... தனதான |
மைச்ச ரோருக நச்சு வாள்விழி மானா ரோடே நானார் நீயா ...... ரெனுமாறு வைத்த போதக சித்த யோகியர் வாணாள் கோணாள் வீணாள் காணா ...... ரதுபோலே நிச்ச மாகவு மிச்சை யானவை நேரே தீரா யூரே பேரே ...... பிறவேயென் நிட்க ராதிகண் முற்பு காதினி நீயே தாயாய் நாயேன் மாயா ...... தருள்வாயே மிச்ச ரோருக வச்ர பாணியன் வேதா வாழ்வே நாதா தீதா ...... வயலூரா வெற்பை யூடுரு வப்ப டாவரு வேலா சீலா பாலா காலா ...... யுதமாளி பச்சை மாமயில் மெச்ச வேறிய பாகா சூரா வாகா போகா ...... தெனும்வீரா பட்டி யாள்பவர் கொட்டி யாடினர் பாரூ ராசூழ் பேரூ ராள்வார் ...... பெருமாளே. |
மை பூசியுள்ளதும், தாமரை, விஷம், வாள் இவற்றைப் போன்றதுமான கண்களை உடைய பெண்களுடன் நான் யார், நீ யார் என்னும் வகையில் (மாதர்கள் மயக்கால் சிறிதேனும் தாக்கப்படாதவராய்) தங்கள் மன நிலையை வைத்துள்ள ஞானத்துடன் கூடிய சித்தர்களும், யோகிகளும், தமது வாழ் நாளாலும், கிரகங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போகும்படியான நாளாகக் காணமாட்டார். அது போலவே, உறுதியாக (மண், பொன், பெண் என்னும்) மூவாசைகள் ஒரு வழியாக முடிவு பெறுவதில்லை. (ஆதலால்) எனது சொந்த ஊர் போல் இனியவனே, என் பேர் போல் இனியவனே, எனக்கு இனிய பிற பொருட்களும் ஆனவனே, என்னை நிச்சயமாகப் பீடிக்கும் மூன்றான எவையும் (முன்பு சொன்ன மூவாசைகள், மும்மலங்கள் - ஆணவம், கன்மம், மாயை, முக்குற்றங்கள் - பொய், களவு, கொலை, முக்குணங்கள் - சத்வம், ரஜஸ், தமஸ், முதலியவை) முற்பட்டு என்னைத் தாக்காமல், இனிமேல் நீயே தாய் போல் இருந்து அடியேன் இறந்து போகாமல் அருள் புரிவாயாக தாமரை போன்ற கண்கள் உடல் எல்லாம் கொண்டுள்ளவனும், வஜ்ராயுதத்தை ஏந்திய கையனுமாகிய இந்திரன், பிரமன் இவர்கள் போற்றும் செல்வமே, நாத ஒலிக்கு அப்பாற்பட்டவனே, வயலூரானே, கிரெளஞ்ச மலையை ஊடுருவித் தொளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவனே, நற்குணம் நிறைந்தவனே, பாலனே, காலை ஆயுதமாகக் கொண்ட சேவலைக் கொடியாக ஆள்பவனே, பச்சை நிறம் கொண்டதும், அழகுள்ளதுமான மயில் மீது தேவர் முதலானோர் மெச்சும்படி ஏறிய பாகனே, அடா சூரனே, ஆஹா, அப்புறம் போகாதே (நில்) என்று சொன்ன வீரனே, (பிரமனாகிய) முனிவனுக்கு அருள் செய்தவரும், கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவரும், பூமியில் சிறந்த ஊராகத் திகழும் தலமும், (தேவலோகத்துப் பசு) காமதேனுவாக வந்த திருமால் வலம் செய்ததுமான பேரூரை** ஆண்டருள்பவருமாகிய சிவபெருமானுக்கு குருவாக வந்த பெருமாளே.
* பிரமன் படைப்புத் தொழில் வராது வருந்திச் சிவபெருமானிடம் முறையிட, நீ பட்டி முனியாய் பேரூரில் வந்து பக்தி செய்வாயாகில் எமது நடனத்தைக் காணலாம் என்றார். திருமால் காமதேனுவாகவும், பிரமன் பட்டி முனிவராகவும் பேரூரில் வழிபட்டு, நடராஜப் பெருமானின் கொடு கொட்டி என்ற ஆடலைக் கண்டனர்.
** பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 950 - பேருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, கொட்டி, பிரமன், போல், என்னும், பட்டி, பேரூரில், இனியவனே, சொன்ன, அருள், வந்த, திருமால், கொடு, யார், நீயே, ரோருக, தானன, பச்சை, பெருமாளே, தத்த, தாமரை, மூவாசைகள்