பாடல் 911 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - தர்பாரி கானடா
தாளம் - ஆதி
தானன தனத்த தானன தனத்த தானன தனத்த ...... தனதான |
தாமரையின் மட்டு வாசமல ரொத்த தாளிணை நினைப்பி ...... லடியேனைத் தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப தாருவென மெத்தி ...... யவிராலி மாமலையி னிற்ப நீகருதி யுற்று வாவென அழைத்தென் ...... மனதாசை மாசினை யறுத்து ஞானமு தளித்த வாரமினி நித்த ...... மறவேனே காமனை யெரித்த தீநயன நெற்றி காதிய சுவர்க்க ...... நதிவேணி கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட காதுடைய அப்பர் ...... குருநாதா சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க சோலைபுடை சுற்று ...... வயலூரா சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து சூர்தலை துணித்த ...... பெருமாளே. |
தாமரைப்பூவிலேயே நிரம்பிய மணம்வாய்ந்த மலருக்குச் சமானமான உன் இரு திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை, மகரந்தப்பொடி விரியும் கொன்றை, சுரபுன்னை, மகிழமரம் இவையெல்லாம் கற்பக விருட்சங்கள் போல வளர்ந்து நிறைந்த விராலிப் பெருமலையில் யாம் நிற்போம்* நீ அதை மனத்தில் நினைத்து அந்தத் தலத்திற்கு வருவாயாக என்று அழைப்பு விடுத்து, என் மனத்திலுள்ள ஆசை என்னும் குற்றத்தை ஒழித்து, ஞானாமிர்தப் பிரசாதம் அளித்த அன்பை இனி என்றைக்கும் யான் மறக்கமாட்டேன். மன்மதனை எரித்த நெருப்புக்கண் உள்ள நெற்றியையும், வேகமாக வந்த ஆகாய கங்கையைத் தாங்கிய ஜடாமுடியையும், காட்டிலுள்ள புற்றில் படமெடுத்து ஆடும் பாம்பை அணிந்த காதையும் கொண்ட தந்தை சிவனாரின் குருநாதனே, சந்திரனும், சூரியனும், நக்ஷத்திரங்களும் உலவும் உயரச் சோலைகள் சுற்றியும் உள்ள வயலூரனே**, அகன்ற திருக்கை வேலினைக் கொண்டு, அதைச் செலுத்தி சூரனது சிரத்தைக் கொய்தெறிந்த பெருமாளே.
* இச் சம்பவம் அருணகிரிநாதர் வாழ்க்கையிலே நடந்த வரலாறு - முதல் நான்கு அடிகள் விராலிமலைக்கு சுவாமிகளை முருகன் வரச் சொன்னதை குறிக்கின்றன.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 911 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனத்த, முருகன், வயலூர், பெருமாளே, விடுத்து, உள்ள