பாடல் 31 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ஹூஸேனி;
தாளம் - அங்கதாளம் - 9
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தனதனன தனன தந்தத் ...... தனதான தனதனன தனன தந்தத் ...... தனதான |
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல் வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே. |
இலக்கியத் தமிழிலும், இசையிலும் சிறப்பான பெண்களிடம் ஈடுபட்டு, அதனால் தளர்வு அடைந்து, இரவும் பகலும் மனது அவர்களையே நினைத்து நான் அலையாமல் இருந்து, உனது உயர்ந்த கருணையால் வரும் பேரின்பக் கடலில் மூழ்கி உன்னை நான் எனது உள்ளத்திலே அறியக்கூடிய அன்பினைத் தந்தருள்வாயாக. மயிலும் ஆடுகளும் உள்ள மலையிடை வாழும் வேடர்களின் அழகிய தினைப்புனத்தைக் காவல் செய்த லக்ஷ்மி போன்று அழகிய குறத்தியாம் வள்ளியை வணங்கிப் பின் அணைந்து கொண்டவனே, திருக்கயிலை போன்ற புனிதமான செந்தில் திருத்தலத்தில் வாழ்பவனே, யானைமுகனாம் வினாயகனுக்கு தம்பியான கந்தப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 31 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, நான், அழகிய, கந்தப், மனது, தந்தத், தனதான, தனதனன