பாடல் 30 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - மோகனம்;
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த ...... தனதான |
அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த இறைவகு ககந்த என்று ...... மிளையோனே எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே. |
(எனக்குவந்த நோயைக் கண்டு) யாவரும் பயந்து மனம் குழம்பி, விரைவில் அகலுக என்று என்னை அருவருப்புடன் கோபித்துக் கூறி விரட்டியும், விடாது நெருங்கி அவர்களின் அடியின் பின்னே தொடர்ந்து, பிணம்போல் நாறும், அழுகிப் போன நிலையில் நோய் முற்றி, வெளிவரும் புழுக்களுடன் எலும்புகள் நிலைகுலையும் துன்பமிகு உடலைச் சுமந்து தடுமாற்றத்தை அடைந்தும், வீடுகள் தோறும் போய் இதமான மொழிகளைக் கூறி, நாட்கள் செல்லச் செல்ல, புதுப்புது இடங்களுக்குச் சென்று விருந்து உண்டு, மனம் போன போக்கில் திரிந்து அழிகின்ற பழிப்பு தீர்வதற்கு, நான்கு வேதங்களின் வகைகளை அறிந்து முறைப்படி, சிறிய சதங்கைகள் கொஞ்சும் மலர் போன்ற உன் பாதங்களை வணங்கும் பாக்கியத்தை நான் என்று பெறுவேனோ? தினை மீதிருந்த கிளிகளை ஓட்டிய மயில் போன்ற வள்ளியின் இளம் தென்னம் பிஞ்சுகள் போன்ற இரு மார்பையும் தழுவும் அழகிய மார்பனே, உலகம் முழுவதையும், முன்பு யானைமுகன் கணபதியோடு போட்டியிட்டு தந்தை சிவனாரின் முன்னிலையில், வட்டமாக வலம் வந்த செம்பொன் மயில் வீரனே, இனிய பழங்களைக் குரங்குகள் சிந்துகின்ற மலைகளுக்கு உரியவனே, திருச்செந்தூரில் அமர்ந்த இறைவனே, குகனே, கந்தனே, என்றும் இளமையோடு இருப்பவனே, ஏழு கடல்களும், அஷ்டகிரிகளும், அசுரர்களும் அஞ்சும்படி, பயம் கொண்டிருந்த தேவர்களை அஞ்சேல் என்று அருளிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 30 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்த, தந்த, தனதன, பெருமாளே, மனம், மயில், வந்த, கூறி, முன்பு, திரிந்து, பெறுவேனோ, தகிட, செம்பொன்