பாடல் 16 - திருப்பரங்குன்றம் - திருப்புகழ்

ராகம் - ......;
தாளம் - ........
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் ...... தனதான |
பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம் பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும் பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம் படப்புயங் கம்பற் கக்குக டுப்பண் செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும் பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள் துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன் புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந் துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால் துவக்குணும் பங்கப் பித்தன வத்தன் புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந் துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங் கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன் குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் ...... கதிர்வேலா குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண் தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங் குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம் பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந் திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் ...... கொலைவேடர் தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண் டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண் திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் ...... பெருமாளே. |
(மார்பில்) பதிந்துள்ள செவ்விய அழகிய பொற்குடம், நாள் தோறும் பருத்து, உயர்ந்து விண்ணில் தலையை முட்ட வல்ல மலை, (யானையின்) தந்தம், செப்பு ஆகியவைகளை நிகர்க்கும் தன பாரங்கள், படத்தை உடைய பாம்பின் பற்கள் கக்கும் விஷம், பண்களைக் களிப்பில் பாடும் வண்டு, அம்பு, நீரில் உள்ள கயல் மீனை ஒக்கும் பெரிய கண்கள், கூந்தலுக்கு ஒப்பான இருட்டு என்றெல்லாம் இளைஞர்கள் (விலைமாதர்களின்) அங்கங்களைத் துதித்து முன்னதாகக் கும்பிட்டு நடந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு அவர்களிடம் சொல்லி, அன்புக் களிப்புடன் உள்ளம் அஞ்ச, சிற்றிடையைச் சுற்றியுள்ள ஆடையை விலக்கி இன்பக் கலக்கத்தைக் கொடுக்கும் கொடியவர்களாகிய வேசிகளிடத்து கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்கு என்று தந்து அருள்வாயோ? குதித்து வெண்ணிறச் சங்குகளை சுறா மீன்கள் மோதி எறியும் கடலில் ஒளிந்து பயந்துப் புகுந்த அசுரன் சூரனின் குடல் சரிந்து விழும்படியாகக் குத்தி அசைக்கும் ஒளி வீசும் வேலனே, சிறந்த கரும்பு போன்ற மொழியை உடையவளும், கிளி போன்றவளுமாகிய, (ஐராவதம் என்ற) யானை மகளான தேவயானையிடம் மறைத்த சொல்லுடன் காட்டில், குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ திதித்திதித் திந்தித் தித்தெயென ஊதுக் கொம்புகள் அதிர்ந்து ஒலி செய்ய பளபளக்கும் வலிமை பொருந்திய வாளை வீசி, திரளாகக் குவியும்படி அந்த இடத்திலேயே (பகைவரை) அழிவுற வெட்டும் கொடிய வேடர்களுடைய தினைப் புனத்துக்குப் போய், விரும்பிய பெண்ணாகிய வள்ளியைப் பார்த்து, தன் உண்மையான உருவத்தை மறைத்து, அங்கு நெருங்கிச் சென்று அவளைத் தழுவி, பின்பு ஒளி வீசும் திருப்பரங்குன்றத்தைப் புக்கிடமாகக் கொண்டு அங்கு வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 16 - திருப்பரங்குன்றம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்ததந், தத்தன, தத்தந், தந்தத், உள்ள, வீசும், அங்கு, பெருமாளே, குக்குகு, ஒக்கும், குங்குக், குக்குங், குகுகூகூ