பாடல் 145 - பழநி - திருப்புகழ்

ராகம் - கெளளை; தாளம் - ஆதி
- 2 களை - 16
தனந்த தனதன தனதன தனதன தனந்த தனதன தனதன தனதன தனந்த தனதன தனதன தனதன ...... தனதான |
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி குலைந்த செயிர்மயிர் குருதியொ டிவைபல ...... கசுமாலக் குடின்பு குதுமவ ரவர்கடு கொடுமையர் இடும்ப ரொருவழி யிணையிலர் கசடர்கள் குரங்க ரறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான சரம்ப ருறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை சவுந்த ரிகமுக சரவண பதமொடு ...... மயிலேறித் தழைந்த சிவசுடர் தனையென மனதினில் அழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைந்த நயனமு மிருமலர் சரணமு ...... மறவேனே இரும்பை வகுளமொ டியைபல முகில்பொழி லுறைந்த குயிலளி யொலிபர விடமயி லிசைந்து நடமிடு மிணையிலி புலிநகர் ...... வளநாடா இருண்ட குவடிடி பொடிபட வெகுமுக டெரிந்து மகரமொ டிசைகரி குமுறுக இரைந்த அசுரரொ டிபபரி யமபுரம் ...... விடும்வேளே சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள் அரம்பை மகளிரொ டரகர சிவசிவ செயம்பு வெனநட மிடுபத மழகியர் ...... குருநாதா செழும்ப வளவொளி நகைமுக மதிநகு சிறந்த குறமக ளிணைமுலை புதைபட செயங்கொ டணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே. |
சிறு குடிலாகிய இந்த வீடு - உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட வழுவழுப்பான கொழுப்பும், எலும்பும், அடுக்காகச் சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும், முறையின்றி சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன், இவற்றோடு கெட்ட அழுக்குகள் நிறைந்ததுமான, இந்த வீட்டில் (உடலில்) ஐவர் (ஐம்புலன்கள்) குடி புகுந்துள்ளனர். அவர்கள் மிகவும் கடுமையான கொடுங்குணத்தினர். அகந்தை கொண்டவர்கள். ஒரு வழியில் போகாதவர்கள். குற்றம் உடையவர்கள். குரங்கு போல் சேட்டை செய்பவர்கள். அறிவில்லாதவர்கள். நன்னெறியில் ஒழுகாதவர்கள். மிருகத் தன்மை உடைய வலிமை வாய்ந்தவர்கள். விஷம் போன்ற குணம் உடையவர்கள். (இத்தகையோர்களுடன்) நட்பு உடையவனை, நரகம் புகுகின்றவனை, குதிரை போல் மிக வேகமாகச் செல்லும் மனத்தை உடையவனை, அழுது ஏங்கும் வறியவனை, துன்பத்துக்கு உறைவிடமாகிய உடல்மேல் அன்பு கொண்டவனுமாகிய என்னை, அழகிய முகத்தவனே, சரவணப் பொய்கையில் தோன்றியவனே, நீஅழகோடு மயிலின் மீது ஏறி வந்து, செழிப்புடன் பூரித்த சிவ ஒளியை என்னுடைய மனதில் அழுந்தும்படி நன்றாக ஓதி உபதேசிக்கும் பொருட்டு வந்த திருமுகச் சிரிப்பு பூத்த ஒளியையும், குளிர்ந்த கண்களையும், உனது மலர் போன்ற இரண்டு திருவடிகளையும் நான் மறவேன்.* இலுப்ப மரங்களும் மகிழ மரங்களும் நிறைந்து இவைகளின் மேல் பல மேகங்கள் தங்கும் சோலைகளில் வசிக்கின்ற குயில்களும் வண்டுகளும் இனிமையான ஒலிகளைப் பரப்ப, மயில்கள் அந்த இசைக்கு ஒத்து நடமிடுகின்ற இணை இல்லாத சிதம்பரம் என்னும் வளப்பம் பொருந்திய நாட்டுக்கு உரியவனே. இருள் சூழ்ந்த கிரெளஞ்ச மலை இடிந்து பொடியாக, பல மலைகளும் பொடிபட, மகர மீன்கள் உறையும் கடல் தீப்பற்றிக்கொள்ள, ஒளி பெற்ற எட்டு திசைகளில் உள்ள யானைகளும் கலங்கிப் பிளிற, ஆர்ப்பரித்து வந்த அசுரர்களோடு (அவர்களுடைய) யானை, குதிரை முதலிய படைகளையும் யம லோகத்துக்கு அனுப்பிய தலைவனே, உயர்ந்த பொன் நிறம் கொண்ட பிரமனும், முனிவர்களும், தேவர்களும், அரம்பை மகளிரும் அரகர, சிவசிவ, சுயம்பு மூர்த்தியே என்று புகழ, நடனம் செய்கின்ற திருவடி அழகாக அமையப்பெற்ற சிவபெருமானுக்கு குருநாதனே, செழித்த பவளம் போன்ற, நிலவைப் பழித்துச் சிரிக்கும் மலர்ந்த முகமும், சிறப்புடன் அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் இரு மார்பகங்களும் அழுந்தும் வண்ணம் வெற்றி கொண்டு அவளை அணைத்த குகனே, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* இப்பாடலில் அருணகிரியார் முருகதரிசனத்துக்கு நன்றி செலுத்துகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 145 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனந்த, போல், உடையவனை, வந்த, மரங்களும், உடையவர்கள், குதிரை, பெருமாளே, தழைந்த, பொடிபட, அரம்பை, சிவசிவ, கெட்ட