பாடல் 1306 - க்ஷேத்திரக் கோவை - திருப்புகழ்

ராகம் -
யமுனா கல்யாணி
தாளம் - அங்கதாளம் - 8
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 8
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2
தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன தந்த தானன தானான தந்தன ...... தனதான |
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி கொந்து லாவிய ராமே சுரந்தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே செம்பு கேசுர மாடானை யின்புறு செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ் செஞ்சொ லேரக மாவா வினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு லாவிய காவேரி சங்கமு கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா கந்த மேவிய போரூர் நடம்புரி தென்சி வாயமு மேயா யகம்படு கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா எம்பி ரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு நன்குற மங்கை மானையு மாலாய்ம ணந்துல கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே. |
(1) கும்பகோணம், அதனுடன் (2) திருவாரூர், (3) சிதம்பரம், தேவர்கள் விரும்பி வாழ்க்கை கொள்ளும் (4) சீகாழி, நிலையான கொன்றை மலர்ச்சடையர் சிவனுடைய (5) மாயூரம், அழகு வாய்ந்த (6) சிவகாசி, திரளான பக்த ஜனங்கள் கூட்டமாக உலாவும் (7) ராமேஸ்வரம், ஒப்பற்ற நிலையில் வந்து பூஜை செய்கின்ற, நான்கு வேதங்களும் வல்ல மறையவர்கள் கூட்டமாகக் கூடும் (8) புள்ளிருக்கும் வேளூர் - வைத்தீஸ்வரன் கோயில், (9) திருப்பரங்குன்றம் எனப்படும் தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே, (10) ஜம்புகேஸ்வரம் - திருவானைக்கா, (11) திருவாடானை, நீ மகிழ்ந்து வாழும் (12) திருச்செந்தூர், (13) திருவேடகம், நீ வாழ்கின்ற சோலைமலையாம் (14) பழமுதிர்ச்சோலை, தென்றல் காற்றுக்குப் பிறப்பிடமான பெருமலை (15) பொதியமலை, என்னும் தலங்களில் எல்லாம் வீற்றிருக்க வந்தவனே, (வடக்கே) பூரித்தலத்தில் (16) ஜெகந்நாதன் உருவில் காட்சி தந்தவனே, செம்மையான உபதேசச் சொல்லை நீ உன் தந்தைக்குச் சொன்ன (17) திருவேரகம், சிறந்த (18) திருவாவினன்குடி - பழநி, (19) குன்று தோறாடல், இவையுடன் பழம்பதி எனப்படும் (20) திருப்புனவாயில், விரிஞ்சிபுரம் எனப்படும் (21) திருவிரிஞ்சை, ஆகிய தலங்களில் அமரும் சிறந்த செம்பொன் நிறம் கொண்ட திருமேனியனே, சோழநாட்டின் தலைநகராகிய வஞ்சி என்னும் (22) கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே, கம்பாநதி தீரத்தில் உள்ள (23) காஞ்சியில் மாமரத்தின் அடியில், மேலே லிங்க ரூபத்தில் பொருந்தி விளங்கும் அழகனே, சங்குகள் உலவும் காவேரி ஆறு கடலில் சங்கமம் ஆகும் (24) காவிரிப் பூம்பட்டினத்திலும், (25) திருச்சிராப்பள்ளி மலையில் வாழ்கின்ற தேவ சேனாபதியே, (26) வயலூர்ப் பெருமானே, நறுமணங்கள் நிரம்பிய (27) திருப்போரூர், நீ நடனம் புரிந்த தலமாம் அழகிய சிவாயம் என்ற (28) திருவாட்போக்கி எனப்படும் தலங்களில் விளங்குபவனே, பாவத்தைத் தொலைக்கும் (29) திருக்கண்டியூரில் எழுந்தருளும் ஸ்வாமியே, கடப்ப மாலையை அணிந்துள்ள அழகிய மார்பனே, எங்கள் சிவபிரானுடன் நடனப் போட்டி செய்த காளியும், அவளைச் சேர்ந்த தோழியரும், தேவலோகத்து ஸரஸ்வதியும், லக்ஷ்மி எனப்படும் நெடுமாலுக்கு உரிய அழகியும், ஆகிய இவர்கள் யாவரும் தினந்தோறும் உள்ளத்தில் எழுச்சியுடன் நின்று, பொருந்திய துதியுடன் போற்றுகின்ற தேவயானையாம், இந்திரன் மனைவி சசியின் மகளோடு, குறக்குலத்தில் தோன்றிய பெண் மான் வள்ளியையும் ஆசையுடன் திருமணம் செய்து கொண்டு உலகத்தில் எங்குமுள்ள தேவாலயங்கள்* தோறும் வீற்றிருக்கும் பெருமாளே.
குறிப்பு: முருகனுக்கு மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்களைத் தொகுத்தளிக்கும் சிறப்பான பாடல் இது.(1) கும்பகோணம் - காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் தலம்,(2) திருவாரூர் - சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையான தலம்,(3) சிதம்பரம் - பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம் - நடராஜப் பெருமான் நடனமாடிய கனகசபை,(4) சீகாழி - சம்பந்தர் அவதரித்த தலம், சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கிலாக மாறி ஒளிந்த இடம்,(5) மாயூரம் - பார்வதி மயிலாக மாறி சிவனை வழிபட்ட தலம்,(6) சிவகாசி - பாண்டிய நாட்டில் வட நாட்டுக் காசிக்கு சமமான புண்ணியத் தலம்,(7) ராமேஸ்வரம் - சிவனை ஸ்ரீராமன் பூஜை செய்து வழிபட்ட க்ஷேத்திரம்,(8) வைத்தீஸ்வரன்கோயில் - முருகன் முத்துக்குமரனாகக் காட்சி தரும் தலம், செவ்வாய்த் தலம்,(9) திருப்பரங்குன்றம் - ஆறு படைவீடுகளில் முதலாவது, மதுரைக்கு அருகில் உள்ளது,(10) ஜம்புகேஸ்வரம் - திருவானைக்கா - பஞ்ச பூதத் தலங்களில் அப்புத்தலம், திருச்சிக்கு வடக்கே 2 மைல்,(11) திருவாடானை - மானாமதுரைக்கு 40 மைலில் சிவகங்கைக்கு அருகே உள்ள தலம்,(12) திருச்செந்தூர் - ஆறுபடைவீட்டில் இரண்டாம் படைவீடு, திருநெல்வேலியிலிருந்து 35 மைல்,(13) திருவேடகம் - சம்பந்தர் மதுரையில் இட்ட ஏடு வைகையில் மேற்கே எதிர்த்துச் சென்று தங்கிய தலம்,(14) பழமுதிர்ச்சோலை - மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள ஆறாவது படைவீடு,(15) பொதியமலை - பாபநாசம், அம்பாசமுத்திரத்திலிருந்து 7 மைலில் உள்ளது, அகத்தியர் க்ஷேத்திரம்,(16) பூரி ஜெகந்நாதம் - ஒரிஸ்ஸா கடற்கரையிலுள்ள விஷ்ணு, ஸ்வாமிகளுக்கு முருகனாகத் தெரிகிறார்,(17) திருவேரகம் - சுவாமிமலை - தந்தை சிவனுக்கு முருகன் உபதேசித்த நான்காம் படைவீடு,(18) திருஆவினன்குடி - பழநி மலையிலும் ஆவினன்குடி அடிவாரத்திலும் உள்ள மூன்றாம் படைவீடு,(19) குன்றுதோறாடல் - பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் ஐந்தாவது படைவீடு,(20) மூதூர் - திருப்புனவாயில் - வேதங்கள் பூஜித்த தலம், திருவாடானைக்கு 12 மைலில் உள்ளது,(21) விரிஞ்சை - விரிஞ்சிபுரம், வேலூருக்கு மேற்கே 8 மைலில் உள்ளது,(22) வஞ்சி - சோணாட்டுவஞ்சி கருவூர், திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ளது,(23) கம்பை மாவடி - காஞ்சீபுரத்தில், ஏகாம்பரநாதர் கோயிலில் மாமரத்தின் கீழ் இருக்கும் முருகன்,(24) காவேரி சங்கமுகம் - காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) - சீகாழிக்குத் தென்கிழக்கில் 10 மைல், பட்டினத்தார் ஊர், (2 கோயில்கள் - பல்லவனீச்சரம், சாயாவனம் - இவை வைப்புத்தலங்கள்).(25) சிராமலை - திருச்சிராப்பள்ளி, திரிசிரன் என்ற அரக்கன் பூஜித்த திருப்பதி, தாயுமானவர் தலம்,(26) வயலூர் - திருச்சிக்கு 6 மைல், ஸ்வாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரம் கிடைத்த தலம்,(27) திருப்போரூர் - செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைல், சமரமராபுரி, என்று வழங்கும் தலம்,(28) சிவாயம் - வாட்போக்கி - குழித்தலைக்கு தெற்கே 5 மைலில் உள்ள ரத்னகிரி, என்ற தலம்,(29) திருக்கண்டியூர் - தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் உள்ள சப்தஸ்தான க்ஷேத்திரம்.
* உலகெங்கும் உள்ள தேவாலயங்களில் உள்ள கடவுள் முருகனே என ஸ்வாமிகள் சொல்வதன் மூலம் உலகில் எல்லா மதத்துக் கடவுளும் ஒருவனே என்ற அவரது பரந்த கொள்கை தெரிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1306 - க்ஷேத்திரக் கோவை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தலம், உள்ள, மைலில், மைல், படைவீடு, எனப்படும், தலங்களில், உள்ளது, வடக்கே, க்ஷேத்திரம், முருகன், காவேரி, திருச்சிக்கு, மேற்கே, தானான, தானன, தந்த, சிதம்பரம், தந்தன, சிவகாசி, சீகாழி, செய்து, வஞ்சி, சிவாயம், இந்திரன், திருப்போரூர், ஆகிய, மாமரத்தின், திருச்சிராப்பள்ளி, விரிஞ்சிபுரம், அழகிய, வழிபட்ட, மதுரைக்கு, திருப்புனவாயில், ஸ்வாமிகளுக்கு, வழங்கும், பூஜித்த, சிவனை, மாறி, தலங்களுள், பஞ்ச, பூதத், சம்பந்தர், கோயில்கள், என்னும், மேவிய, மாவடி, கம்பை, பெருமாளே, கும்பகோணம், மாயூரம், திருவாரூர், செம்பொன், மூதூர், கொன்றை, உம்பர், லாவிய, வந்து, குன்று, வேளூர், ராமேஸ்வரம், பூஜை, பொதியமலை, பழமுதிர்ச்சோலை, தகதிமி, காட்சி, சிறந்த, திருவேரகம், வாழ்கின்ற, திருவேடகம், வீற்றிருக்கும், திருப்பரங்குன்றம், ஜம்புகேஸ்வரம், திருவானைக்கா, திருச்செந்தூர், திருவாடானை, பழநி