பாடல் 1254 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த ...... தனதான |
தென்றலு மன்றி யின்றலை பொங்கு திண்கட லொன்று ...... மிகமோதச் செந்தழ லென்று வெந்தழல் சிந்து திங்களும் வந்து ...... துணையேய அன்றிலு மன்றி துன்றுச ரங்க ளைந்துமெ னெஞ்ச ...... மழியாதே அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச அன்பொட லங்கல் ...... தரவேணும் வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை ...... புணர்மார்பா வெண்டர ளங்கள் தண்டைச தங்கை மின்கொடி லங்கு ...... கழலோனே கொன்றைய ணிந்த சங்கர ரன்று கும்பிட வந்த ...... குமரேசா குன்றிட அண்ட ரன்றுய வென்று குன்றமெ றிந்த ...... பெருமாளே. |
தென்றல் காற்று மட்டுமன்றி, இன்றைய தினத்தில் அலை பொங்கி வலிய கடல் ஒன்றும் மிகப் பலமாக என்னைத் தாக்க, பொங்கி எழும் நெருப்பு என்று சொல்லும்படி கொடிய கனலைத் தூவுகின்ற சந்திரனும் வந்து (அவைகளுக்குத்) துணையாகப் பொருந்த, அன்றில் பறவையும், அதனுடன் நெருங்கி வந்த (மன்மதனின்) ஐந்து மலர்ப் பாணங்களும் என்னுடைய உள்ளத்தை அழித்து விடாமல், அந்திப் பொழுதில் வந்து, என்னுடைய கொடிய துயர் அஞ்சி நீங்க அன்புடன் உன் மாலையைத் தந்து அருள வேண்டும். வெற்றி விளங்கும் வேடர்களின் பெண்ணாகிய வள்ளியின் மேலோங்கு மார்பகங்களை அணைந்த மார்பனே, வெண்மையான முத்துக்களால் ஆன தண்டையும், சதங்கையும் மின்னலைப்போல் ஒளி வீசும் கழலை உடையவனே, கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் அன்று உன்னை வணங்க, அவருக்கு உபதேசம் செய்ய வந்த குமரேசனே, மனம் வேதனையால் குன்றி இருந்த தேவர்கள் அன்று பிழைக்கும்படி வெற்றி பெற்று, கிரெளஞ்ச மலையைப் பிளந்தெறிந்த பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக பாவிப்பதாக அமைந்தது.தென்றல், அலைகடல், நிலவு, மன்மதன், மலர்ப் பாணங்கள், அன்றில் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1254 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, வந்து, வந்த, தந்த, என்னுடைய, மலர்ப், வெற்றி, அன்றில், அன்று, தென்றல், மன்றி, பெருமாளே, பொங்கி, கொடிய