பாடல் 1182 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன ...... தனதான |
பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர ...... வலைவீசிப் பொன்கண் டிளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டுயிர் புண்கொண் டுருகி யாட்படு ...... மயல்தீரக் கொங்கின் புசக கோத்திரி பங்கங் களையு மாய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற ...... கிரிசோண குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவ ...... தொருநாளே எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெஞ்சண் டதனு வேட்டுவர் ...... சரணார விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை மென்குங் குமகு யாத்திரி ...... பிரியாதே எங்குங் கலுழி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட எங்குங் குருவி யோச்சிய ...... திருமானை என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ டென்றும் பொழுது போக்கிய ...... பெருமாளே. |
சீறி எழும் பொல்லாத யமனையும் விஷத்தையும் (தம் இரு கண்களிலும் கொண்டு) வித்தியாசம் இன்றி யாரிடத்தும் விருப்பத்துடன் பார்க்கும், ஆசை பொங்கும் புதுமை வாய்ந்த கண்ணாகிய வலையை எறிந்து, பொற்காசுகளைப் பார்த்து மன நெகிழ்ச்சி கொள்ளும் நடனமாடும் கணிகையரின் துன்பத்தைத் தரும் புணர்ச்சியை விரும்பி, உயிர் புண்பட்டு மனம் உருகி அந்த விலைமாதர்களுக்கு ஆளாகின்ற காம மயக்கம் ஒழிய, கொங்கு நாட்டில் உள்ள பாம்பு மலையாகிய திருச் செங்கோட்டையும், (தரிசித்தோர்களின்) பாவங்களைப் போக்கும் ஆய்க்குடி என்னும் தலத்தையும், வாசனையுடன் தினமும் நீலோற்பல மலர் பூக்கின்ற திருத்தணிகை மலையையும், சோணாசலம் என்ற திருவண்ணாமலையையும், கதிர்காமத்தையும், அழகிய பரம் என்னும் சொல் முன்னே வருகின்றதும், தேவர்கள் போற்றுவதுமான திருப்பரங்குன்றத்தையும், பிற தலங்களையும் போற்றி வாழ்த்தக்கூடிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? எவ்விடத்தும் ஒளிர்வதும், வல்லமை மேம்பட்டு விளங்கும் அம்புகளையும், கட்டப்பட்டுள்ள கொடிய வில்லையும் கொண்ட வேடர்கள் (உனது) திருவடிகளை வணங்க, உனது அருள் வாய்த்த காரணத்தால், அழகிய குளிர்ந்த இவ்வுலகு செய்த தவப் பயனாய் உதித்த மென்மையான குங்குமம் பூசிய மார்பகங்களாகிய மலைகளை உடையவளும், எல்லாவிடத்தும் கான்யாறு பாய்ந்து ஒலித்து எழவும், எங்கும் வேதங்களின் ஒலி பெருகவும் (விளங்கிய வள்ளிமலைத் தினைப் புனத்தில்) குருவிகளைக் கவண் கல்லைக் கட்டி ஓட்டிய அழகிய மான் போன்றவளுமான வள்ளியை, நீ திரு என்றும், மான் என்றும் தன் வசம் இழந்து வணங்க, நாள்தோறும் புதிதாகச் சந்திப்பது போன்ற மகிழ்ச்சியோடு தினமும் உல்லாசமாகக் காலம் கழித்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1182 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, தந்தந், தாத்தன, உனது, மான், என்றும், தினமும், வணங்க, பெருமாளே, பொங்கும், கொடிய, கொங்கின், எங்கும், எங்குங், என்னும்