பாடல் 1000 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - சிம்மேந்திர மத்யமம்
தாளம் - தி.ரத்ருவம் - 2 களை - 22
- எடுப்பு - /3/3/3 0
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன ...... தனதான |
வேடர்செ ழுந்தினை காத்திதண் மீதிலி ருந்தபி ராட்டிவி லோசன அம்புக ளாற்செயல் ...... தடுமாறி மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு வேளைபு குந்தப ராக்ரம ...... மதுபாடி நாடறி யும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்பதி னாலுல கங்களு மேத்திய ...... இருதாளில் நாறுக டம்பணி யாப்பரி வோடுபு ரந்தப ராக்ரம நாடஅ ருந்தவம் வாய்ப்பது ...... மொருநாளே ஆடக மந்தர நீர்க்கசை யாமலு ரம்பெற நாட்டியொ ராயிர வெம்பகு வாய்ப்பணி ...... கயிறாக ஆழிக டைந்தமு தாக்கிய நேகர்பெ ரும்பசி தீர்த்தரு ளாயனு மன்றெயில் தீப்பட ...... அதிபார வாடைநெ டுங்கிரி கோட்டிய வீரனு மெம்பர மாற்றிய வாழ்வென வஞ்சக ராக்ஷதர் ...... குலமாள வாசவன் வன்சிறை மீட்டவ னூரும டங்கலு மீட்டவன் வானுல குங்குடி யேற்றிய ...... பெருமாளே. |
வேடர்களுடைய செழுமை வாய்ந்த தினைப் புனத்தைக் காவல் காத்து, (அங்கு) பரண் மீது இருந்த வள்ளிப்பிராட்டியாருடைய கண்கள் ஆகிய அம்புகள் பாய்வதால் செயல் தடுமாற்றம் அடைந்ததுபோல நடித்து, உடல் சோர்வு அடைந்து மனம் உருகி நின்று, பரிதபிக்கத் தக்க நிலையில் (கிழவேடம் பூண்டு) தினைப் புனத்திற்கு சிறந்த சமயம் பார்த்து உள்ளே புகுந்த திறமையைக் கவிகளில் அமைத்துப் புகழ்ந்து பாடி, உலகத்தோர் (உனது கருணையை) அறிந்து உய்யும்படி ஓலமிட்டு உரைக்கின்ற நாவல்ல புலவர்களைக் கட்டி வசீகரிக்கும், பதினான்கு உலகில் உள்ளோரும் போற்றும் உனது இரண்டு திருவடிகளில், மணம் கமழும் கடப்பமாலையை அணிந்த உன் திருவடிகளில், அன்புடன் வைத்துக் காக்கின்ற உனது திறமையை, நாடி நிற்க, அருமையான தவச் செயலால் அடியேனுக்கும் கூடும்படியான ஒரு நாள் கிட்டுமோ? பொன் மயமான மந்தர மலையை பாற்கடல் நீரில் அசையாதபடி வலிமையுடன் மத்தாகப் பொருத்தி வைத்து, ஒப்பற்ற ஆயிரக் கணக்கான வெப்பம் மிகுந்த பிளவான நாக்குகளை உடைய பாம்பாகிய வாசுகியை (மத்தின்) கயிறாகச் சுற்றி, பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து, இந்திராதி தேவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி (மோகினியாக) அருள்புரிந்தவனும், ஆயர் குலத்தில் அவதரித்தவனுமான திருமாலும், முன்பு, முப்புரங்களும் தீயில் அழிவதற்காக, அதிக கனமாக வடக்கே உள்ள பெரிய மேரு மலையை (வில்லாக) வளைத்த வீரனுமாகிய சிவபெருமானும், எங்களது சுமையைக் குறைத்த* செல்வமே என்று உன்னைத் துதிக்க, வஞ்சக அரக்கர்களின் கூட்டம் அழிய, இந்திரனின் கொடிய சிறையை நீக்கி அவனை விடுவித்து, அவன் ஊராகிய பான்னுலகத்தையும் மற்றும் செல்வங்களையும் முழுவதுமாக மீட்டுத் தந்து, அவனுடைய விண்ணுலகத்தில் குடி ஏற்றி வைத்த பெருமாளே.
* திருமாலின் தொழிலாகிய காத்தல் தொழிலை தேவர்களைக் காத்ததால் முருகனே செய்தான்.சிவனின் அழித்தல் தொழிலை அரக்கர்களை அழித்து முருகனே செய்தான்.எனவே இருவரின் தொழில் பாரத்தையும் குறைத்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1000 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, உனது, தாத்தன, தந்தன, நீக்கி, மிகுந்த, முருகனே, செய்தான், மலையை, தொழிலை, தினைப், ராக்ரம, மந்தர, வஞ்சக, பெருமாளே, திருவடிகளில்